குரங்கு பொம்மை திரையவிமர்சனம் 7.3/10

மனிதனின் பரிணாமம் குரங்கிலிருந்து தான் வந்துள்ளது என படித்திருப்போம். குரங்கு பொம்மை எதை பார்க்கவேண்டும், பேச வேண்டும், கேட்க வேண்டும் என சொல்ல கேட்டிருப்போம். இப்போது வந்துள்ள குரங்கு பொம்மை எப்படிப்பட்டது, என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

கதைக்களம்

ஹீரோவாக நடித்திருக்கும் விதார்த் சென்னையில் ஒரு கார் ட்ரைவர். பாரதிராஜா தன் மகன் மீது பயமும், பாசமும் வைத்துள்ள ஒரு கிராமத்து தந்தைவிதார்த்துக்கு ஒரு தங்கை, அம்மா என அழகான குடும்பம்.
ஊரே பார்த்து பயப்படும் ஆளாக, கெட்டவனாக, டானாக இருப்பவர் ஏகாம்பரம். ஆனால் பாரதிராஜாவை பொறுத்தவரை அவர் நல்லவர். அப்படி என்ன இவர்கள் இருவருக்குள் என்றால் அதிலும் ஒரு பிளாஷ் பேக் இருக்கிறது.
பாரதிராஜா தன் நண்பன் சொன்ன வேலையை செய்துமுடிக்க சென்னை வருகிறார். அங்கு பொருளை கைமாற்றுவதற்காக ஒருவரை சந்திக்கும் நேரத்தில் கதையின் ஆட்டம் ஆரம்பமாகிறது.
இதற்கிடையில் பொது இடத்தில் விதார்த், திருடனிமிருந்து ஒரு பையை மீட்டு அதை தவறவிட்ட பெரியவரிடம் ஒப்படைப்பதற்காக காவல் நிலையத்தை நாடுகிறார். அங்கு தான் ஒரு ட்விஸ்ட்.
மேலும் சென்னைக்கு வந்த அப்பாவை காணவில்லை என தெரிந்ததும் விதார்த் தேட, கதை வலுக்கிறது. ஒரு பக்கம் எகிறிக்கொண்டு சென்னைக்கு ஏகாம்பரம் பறக்க, பாரதிராஜா என்ன ஆனார், விதார்த் சிக்கலில் இருந்து தப்பித்தாரா, பொருள் என்னானது என்பது கதையின் மிச்சம்.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ விதார்த் கதைக்கு சரியானதொரு தேர்வு. இயற்கையான நடிப்பு. கதாபாத்திரம் உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதையில் இவர் வில்லனுக்கு ட்விஸ்ட் மூலம் பாடம் சொல்லியது கதையின் உச்சம்.
ஹீரோயின் டெல்னா புதுமுகமாக தெரிவார். ஆனால் சில படங்களில் முன்பே நடித்துள்ளார் என்பதை படம் காட்டுகிறது. விதார்த்துக்கு இணையான ஒரு ஜோடி. இவரை பெண் பார்க்க வந்தபோது நடக்கும் விசயங்கள் ரசிக்க வைக்கிறது.
பல படங்களை எடுத்த பாரதிராஜாவை பற்றி சொல்ல அவரிடம் என்ன குறை இருக்கிறது. இப்படத்தில் அத்தனை ஒரு எதார்த்தம். அப்பாவாக நடித்திருந்தாலும் கதையில் இவரும் ஒரு முக்கிய அங்கம். ஒரு பாதி விதார்த் என்றால், இன்னொரு பாதி இவரால் தான்.

கிளாப்ஸ்

நாளைய இயக்குனர் என்பதை நிரூபித்து விட்டார் நித்திலன். முதல் படம் என்பது போல தெரியவில்லை. முழுமையான பாராட்டுகளை பெறுகிறார்.
இயக்குனருடன் கைகோர்த்து கதையை அப்படியே காட்சிபடுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர். காட்சிகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தியதில் தெளிவு.
கிராமத்து சாயலில் பாடல்கள் கேட்கும் விதம். ஆங்காங்கே பின்னணி இசை பொருத்தியில் நேர்த்தி. கன்னட சினிமாவில் அஜனேஷ் சிறந்த இசையமைப்பாளர் என தெரிகிறது.
விதார்த், டெல்னா ஜோடி கதைக்கேற்ற நடிப்பு, பாரதிராஜா கதையின் இன்னொரு ஹீரோ என்பது ஒரு இடத்தில் தனியே தெரியும்.

பல்ப்ஸ்

ஏதாவது சிறு குறையிருக்க வேண்டுமல்லவா. டூயட் பாடல் வந்ததுமே இன்னொன்றா என கேள்வி கேட்க வைக்கிறது.மொத்தத்தில் குரங்கு பொம்மை வெறும் கல் அல்ல, கலை. உணர்வுடன் பேசும். தரமான படம் பார்த்த ஒரு திருப்தி.
😊😊😊😊

Comments

Popular Posts